உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது தலைத்தூக்க தொடங்கியுள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரள மாநிலத்தில் மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்
அதேசமயம் வெளிநாடுகளில் இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அறிகுறிகளுடன் இருப்பவர்கள் கண்கானிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுதலின் படி, பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. கோயில்களில் நடைபெறும் பூஜைகளுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சமபரிமலை, திருப்பதி ஆகிய தேவசம் போர்டுகள் அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என மலையாள சினிமா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக மத்திய அரசின் முடிவின்படி, வெளிநாட்டு பயணிகள் கப்பல்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை அனுமதியில்லை என சென்னை துறைமுக கழகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனா நாட்டவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதிக்கு முன்னர் விசா வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்த விமான போக்குவரத்து இயக்குநரகம், ஜனவரி 15ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் சீனா சென்ற வெளிநாட்டவர்கள் வான், தரை, கடல் என எந்த மார்க்கம் வழியாகவும் இந்தியாவுக்குள் நுழைய கூடாது என தடையும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
Source: https://tamil.samayam.com/latest-news/state-news/ships-from-overseas-are-not-allowed-until-march-31-due-to-the-corona-virus-chennai-port/articleshow/74573192.cms