சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்: மத்திய அரசு உத்தரவு – தி இந்து

சென்னைச் செய்திகள்

கரோனா பாதிப்பால், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 340ஐத் தாண்டியுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட மற்றும் பலி ஏற்பட்ட 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல இந்தியா முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர், மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/corona-virus/545597-chennai-kanchipuram-erode-lock-down.html