கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் மற்றும் தொழில்கள், போக்குவரத்து பொதுப் பயன்பாடுகள் மற்றும் ஊடகத்தினர், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக வெளியில் செல்வோர் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், குடும்பத்தில் நிகழும் இறப்பு, திருமணம் அல்லது அவசர மருத்துவ காரணங்களுக்காக முன் அனுமதி பெற்றுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழக பிற மாவட்டங்கள் இடையிலோ, வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் 75300 01100 என்ற அவசரக்கால கட்டுப்பாட்டறை எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.puthiyathalaimurai.com/newsview/67277/The-Corporation-of-Madras-has-announced-that-those-who-work-in-industries-and-businesses-can-get-passes