சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்று வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிசோதனை நடந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

image

CM Edappadi press meet full speech | தமிழத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை கேட்டறிந்து வருகின்றனர்.

கடந்த மாதம் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள துணிக்கடையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பீனிக்ஸ் மால் சென்றவர்கள்

தொடர்ந்து அந்த வளாகத்தில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பீனிக்ஸ் மால் வணிக வளாகத்திற்கு மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை சென்று வந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்

3 ஆயிரம் பேர் தனிமை

இதையடுத்து சென்னை பீனிக்ஸ் மாலுக்கு குறிப்பிட்ட கடைக்கு சென்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்று சென்னை மாநாகராட்சி தெரிவித்தது. இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டை மிண்ட் தெருவை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் காய்ச்சல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தம்பதிகள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதில் ஆண் நபர் டெல்லிக்கு வியாபார நிமிர்த்தமாக சென்றுவிட்டு வந்து வேளச்சேரி மாலிற்கு சென்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 96 பேர்களில் இந்த தம்பதிகள் இருவரும் அடங்குவர்.

தொடர்பில் இருந்தவர்கள்

இதையடுத்து தம்பதிகளின் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த தம்பதியுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அத்துடன் அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மண்ணடியில் கொரோனா

அத்துடன் சென்னை மாநகராட்சி 3வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தம்பதி வசித்து வரும் மிண்ட் தெருவை மூடி சீல்வைத்தனர். அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளைத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை மண்ணடி மரைக்கான் தெருவில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த தெருவும் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-confirmed-to-couple-on-their-way-to-velachery-phoenix-mall-chennai-382241.html