கொரோனாவின் கொடூரமான பகுதிகள் இவைதான் : சென்னைவாசிகளே கவனம் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் யாரும் நேரடியாக மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது
WebDesk
April 13, 2020 01:05:21 pm 

சென்னையின் அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் மட்டும் நகரின் 48 சதவீத கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக கிரேட்டர் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

[embedded content]

சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி, அங்குள்ள வீடு வீடுகளாக சென்று மக்களுக்கு கொரோனா சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், அண்ணாநகர் ( மண்டலம் 8), தேனாம்பேட்டை (மண்டலம்9) மற்றும் கோடம்பாக்கம் (மண்டலம் 10) பகுதிகளில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக நடத்திய சோதனைகளின் போது, கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அண்ணாநகரில் 459, தேனாம்பேட்டையில் 375 மற்றும் கோடம்பாக்கத்தில் 274 ஆக இருந்த நிலையில், தற்போது நடந்த சோதனையில், இந்த எண்ணிக்கை 547, 493 மற்றும் 405 ஆக அதிகரித்துள்ளது.

வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம் ( மண்டலம் 5) பகுதியே, சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக (கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 328பேர்) இருந்த நிலையில், தற்போது இந்த பகுதிகள் அதை முறியடித்துள்ளன.

1 லட்சம் மக்கள் இருக்கும் பகுதியில் 100 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அதை சாதாரணமாக கணக்கிடுகிறோம். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு மருத்துவக்குழுக்களை அனுப்பி, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கடந்த சனிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இதுவரை 1.05 கோடி பேரிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் 93 சதவீத பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 3,036 பேருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டதில், 2,261 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. எஞ்சியுள்ள 775 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில், திருவொற்றியூரில் 23 பேர், தண்டையார்பேட்டையில் 04, ராயபுரத்தில் 17, தேனாம்பேட்டையில் 63, அடையார் பகுதியில் 03 பேர் உள்ளிட்டோரிடமிருந்து கியாஸ்க் முறையில் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் யாரும் நேரடியாக மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது. வழங்க விருப்பமுள்ளவர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அதனை வழங்க வேண்டும். தாங்கள் தொற்று பரவா வண்ணம், தக்க பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு வழங்குவோம். என்று ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-chennai-tamil-nadu-containment-zones-chennai-corporation-183801/