கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்க வேண்டிய சூழல் உருவானது. இதில் குறிப்பாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகள் எழுதி முடித்தால் தான் வேலைவாய்ப்புகளுக்கும், மேற்படிப்பிற்கும் செல்ல முடியும்.இதனிடையே பல்கலைக்கழக, கல்லூரிகள் அடுத்த பருவத்தின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் இன்று (ஏப்.17) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள் அனைத்தும், அடுத்த பருவத்தில் கல்லூரி திறந்த உடனே நடத்தப்படும். இடைவெளியே இல்லாமல் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேவைப்பட்டால் காலை, மாலை என இரண்டு அமர்வுகளாகவும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். இறுதியாண்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, இறுதியாண்டு தேர்வின் முடிவுகள் சீக்கரம் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறப்பு தேதி விவரங்கள், தேர்வு கால அட்டவணை ஆகியவை, அரசு வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்படும். அதே நேரத்தில் துறைத்தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி தங்களுடைய மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.samayam.com/education/board-exams/madras-university-will-conduct-semester-exam-continuously-without-giving-breaks/articleshow/75198821.cms