கொரோனா பாதிப்பு சென்னை ராயபுரம் கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்தது. – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ராயபுரம்- கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.

சென்னை

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1041ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளில் சென்னையில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் சென்னையில் காணப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 750 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் முதன்மை நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அதே வேளையில் பல புதிய கட்டுப்படுத்துதல் பகுதிகள் அமைக்கப்பட்டு அங்கு கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமூக தொற்று ஆரம்பித்து விட்டதோ என்ற அச்சம் சென்னை மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  60 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான்  68 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 77 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 73 பேரும், கோடம்பாக்கம் 68 பேரும்,  தண்டையார்பேட்டையில் 53 பேரும், திரு.வி.க.நகரில் 40 பேரும், அண்ணாநகரில் 40 பேரும், அடையாறு 33 பேரும், வளசரவாக்கத்தில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாதவரத்தில் 16 பேரும்,  அம்பத்தூரில் 13 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும், திருவொற்றியூரில் 10 பேரும், பெருங்குடியில் 6 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், மணலியில் 2 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ராயபுரம், கோடம்பக்கத்தில் மட்டுமே அதிகபட்ட பாதிப்பு இருந்த நிலையில், தேனாம்பேட்டையில் ஒரே நாளின் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 70 முதல் 75 சதவீத வைரஸ் தொற்று ஏற்கனவே வைரஸ் பாதித்த பகுதிகளில் உள்ள இல்லங்களில் இருந்துதான் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 177வது வார்டில்  மட்டும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.எனவே, இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த பகுதி வாரியாக திட்டமிடல் பணியை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 1185

கோடம்பாக்கம் 1041

திரு.வி.க.நகர் 790

தேனாம்பேட்டை 746

தண்டையார்பேட்டை 581

அண்ணா நகர் 554

வளசரவாக்கம் 522

அடையாறு 367

அம்பத்தூர் 317

திருவொற்றியூர் 147

மாதவரம் 121

சோழிங்கநல்லூர் 95

மணலி 86

பெருங்குடி 86

ஆலந்தூர் 80

சென்னையில், 60.87 சதவீதம் ஆண்கள், 39.10 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/05/18151735/Coronal-impact-has-crossed-thousands-in-Rayapuram.vpf