வட சென்னையில் ஒரு வாரம் ‘முழு ஊரடங்கு..?’ கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர ஆலோசனை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வட சென்னையில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்வதே இதற்கு காரணம்.

சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக, சுகாதாரத்துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு நாட்கள் கடந்துவிட்டன.

இருப்பினும், இன்னும் கொரோனா வரைபடம் தட்டையாகவில்லை. மாறாக தினம் தினம் புது உச்சம் தொட்டு வருகிறது. கடந்த பல நாட்களாகவே, சென்னையில் தினமும், 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

imageஉலக நாடுகளில் ஒரு நாள் பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா- 24 மணிநேரத்தில் 10,864 பேருக்கு கொரோனா

தினமும் ஆயிரம் பேர்

கடந்த ஏழு நாட்களில், 1,000 க்கும் மேற்பட்ட தினசரி கேஸ்களை தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த 7 நாட்களில் மட்டும் 30% (8,968) கேஸ்கள் வந்துள்ளன. அதில் சுமார் 80 சதவீதம் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வட சென்னையைச் சேர்ந்தவர்கள்.

வட சென்னை பாதிப்பு

ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர் என வட சென்னை பாதிப்பு பட்டியல் நீள்கிறது. 6 மண்டலங்களில்தான் மிக அதிக பாதிப்பு உள்ளது. பிற பகுதிகளை விட வடசென்னையில் தான் உயிழப்பும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 251 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில் வடசென்னையில் மட்டும், 120 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை கொரோனா பாதிப்பு சதவீதம்

தமிழகம் முழுக்க 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 31,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6 சதவீதம் அளவுக்கு பாதிப்பு உள்ளது. சென்னையில் 1 லட்சத்து 21950 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 22,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, 18.16 சதவீதம் பேருக்கு பாதிப்பு உள்ளது. அருகாமையிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

வட சென்னை நிலவரம்

வட சென்னையின் 6 மண்டலங்களில் உள்ள 65 வார்டுகளில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகுதான், வடசென்னையில் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்துள்ளது. கடைவீதிகள், சந்தைகளில் சமூக விலகல், முகக்கவசம் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்பது அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

வட சென்னையில் முழு ஊரடங்கு

எனவே 7 நாட்கள் வட சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள், பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. முறையான முன் அறிவிப்பு செய்துவிட்டு அதன்பிறகு முழு ஊரடங்கு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. எற்கனவே, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு அடைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள் அதிகாரிகள். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அவற்றில் 6,700 தெருக்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகம் இருக்கிறது. தெருக்களை தனிமைப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/corona-full-lockdown-may-be-implement-in-north-chennai-387707.html