மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் – தடை விதிக்கக் கோரி மனு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.


ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; புகாரளிக்கும் வசதிகள் என்னென்ன? – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்

அந்த மனுவில், மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/plea-to-ban-online-classes-madras-high-court-197834/