சென்னையில் ஊரடங்கை கண்டிப்பாக்க வேண்டும்.. ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்

chennai lockdown : சென்னையில் ஊரடங்கை உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில், ஜூன் 8 ம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தொற்றுக்கு 7 ஆயிரத்து 200 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 8 ம் தேதி வரை, 33 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 286 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்குகள்… முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதும், சென்னையில் தொற்று தீவிரம் அதிகமாக இருக்கும் என செய்திகள் வெளியாகி வருவதாகவும், சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், சென்னையில் ஊரடங்கை தளர்த்துவதற்கு பதில், ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-lockdown-strict-demand-petition-field-today-198295/