மெட்ராஸ் திரைப்படம் போல் பொது சுவருக்காக சண்டை; கொலையில் முடிந்தது! – UK NEWS

சென்னைச் செய்திகள்

தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக டீக்கடைக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த காசிதர்மம் கிராமத்தில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவ்வாறிருக்கையில் இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே பொதுச்சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியுள்ளது. இந்நிலையில் சுடலைமுத்து தனது வீட்டின் முன்பாக நேற்று மாலை அமர்ந்து கொண்டிருக்கையில்,

அங்கே வந்த அவரது தம்பி மகன் மாடசாமிக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாடசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலை முத்துவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முற்பட்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற மாடசாமியை பக்கத்து வீட்டுக்காரர்கள் மடக்கிப்பிடித்து அச்சன் புதூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக செய்திகள்

Source: https://athirvu.in/38009/