சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று மற்ற ஆஸ்பத்திரிகளிலும் பாதிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில் 1,479 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும், காஞ்சீபுரத்தில் 26 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 ஆயிரத்து 698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 18 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 367 ஆக அதிகரித்தது. நேற்று உயிரிழந்த 18 பேரில் 15 பேர் சென்னையையும், 2 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தையும், ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், கொரோனா தொற்று மருத்துவ பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

சென்னையில், ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியும் ஒருவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என பிரத்யேக வார்டு செயல்பட்டு வருகிறது. இந்த வார்ட்டில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வாரத்துக்கு ஒரு முறை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

எனவே 7-வது நாள் முடிவடையும் போது அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில், 126 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 7 பேர் தலைமை டாக்டர்கள். மேலும் 26 பேர் பல்வேறு சிகிச்சை துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் ஆவார்கள். மேலும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

அந்த வகையில், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களும், எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்களும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தலா 2 டாக்டர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். டாக்டர்கள் பாதிக்கப்படுவது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/06/13024855/Coronavirus-infects-33-doctors-at-Rajiv-Gandhi-Hospital.vpf