பொது முடக்கம் வேண்டுமா, வேண்டாமா? மக்கள் சொல்வது இதுதான்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

இந்தியாவில் நூறு நாள்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் மக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னை உட்பட நாடு முழுவதும் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆன்லைன் மூலம் நடத்திய கருத்துக் கணிப்பில், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உட்பட பதிலளித்தவர்களில் 88% பேர் பொது முடக்கம் தொடர விரும்புவதாகக் கூறினர். வணிக மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் அதற்கு எதிராக இருந்தனர்.

50% சென்னைவாசிகள் பொதுமுடக்கம் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், 12% பேர் அதை முழுமையாக நீக்க வேண்டும் என்று கூறினர். மற்ற மாநிலங்களில், சுமார் 37% பேர் தீவிரமான பொது முடக்கத்தை விரும்பினர், 49% பேர் பொது முடக்கத்துக்கு ஆதரவாக இருந்தனர், மேலும் 13% அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

கொரோனா: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

பொது முடக்கத்தின் தாக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸின் நிர்வாக ஆய்வுத் துறையின் கணக்கெடுப்பு 3,136 பேரிடம் எடுக்கப்பட்டது. இதில் சென்னையிலிருந்து 46.6% பேரும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் 16.9% பேரும், பிற மாநிலங்களில் 36.5% பேரும் அடங்குவர்.

அதிகபட்சமாக 51.1% பேர் பொதுமுடக்கம் மிதமான செயல்திறன் உடையதாகவே கூறினர். 21.3% பேர் இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினர். 5.5% பேர் பொது முடக்கம் பயனற்றது கூறியுள்ளனர். “பொதுமுடக்கம் மிதமான செயல்திறன் உடையது என்று கூறினாலும், பெரும்பான்மையானவர்கள் அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர விரும்பினர். அவர்கள் வாழ்வாதாரத்தை விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது ”என்று பேராசிரியர் ஏ. தில்லை ராஜன் கூறினார்.

45% தொழில்முனைவோர், 50% வேலை தேடுபவர்கள் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 48% ஓய்வு பெற்றவர்களும் 34% இல்லத்தரசிகளும் பொது முடக்கத்தால் தாங்கள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுவதாகக் கூறினர். “பொது மற்றும் தனியார் துறையில் நிலையான வருமானம் உள்ளவர்கள் பூட்டுதலை விரும்புகிறார்கள், அதிக எண்ணிக்கையிலான தொழில்முனைவோர் அதை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். நோய் அபாயத்துடன் ஒப்பிடும்போது தொழில்முனைவோருக்கு வாழ்வாதார ஆபத்து அதிகமாக உள்ளது என்பதை இது குறிக்கிறது, ”என்று பேராசிரியர் ஏ. தில்லை ராஜன் கூறினார்.

கொரோனா பாதிப்பு: தேர்தல் வாக்குப்பதிவு முறையில் அதிரடி மாற்றம்!!

இயல்பு நிலைக்கு திரும்புவதில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தொழில்முனைவோரைத் தவிர, மற்றவர்கள் ஏதேனும் ஒரு வகையான பொது முடக்கம் தொடரவேண்டும் என விரும்புகிறார்கள் என்று பேராசிரியர் தில்லை ராஜன் கூறினார்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இளைஞர்கள் தீவிரமான பொது முடக்கத்தை விரும்புகிறார்கள், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கத்தை விரும்புகிறார்கள். 25 வயதிற்குட்பட்டவர்களில் 54% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும், 55 வயதிற்கு மேற்பட்டவர்களில் 37% மட்டுமே தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/madras-iit-survey-about-coronavirus-lockdown/articleshow/76751133.cms