கொரோனா மரணம்: உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகள் என்ன? – அறிக்கை கேட்கும் ஐகோர்ட் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் மயானம் கொண்டு சென்ற போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.

கடன் வசூலிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடர தடை ஏன்? – அரசு பதிலளிக்க உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தொற்றினால் மரணமடைவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/corona-death-indian-medical-research-council-regulations-madras-high-court-205530/