வங்கிகள், கூட்டுறவு, நுகர்பொருள் அலுவலர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வழங்கல், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள், சார்ந்த அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

“கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சென்னை மாநகர பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அங்காடிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள 31.07.2020 வரை சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இயங்கவுள்ளன.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வழங்கல், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள், சார்ந்த அலுவலகங்களில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதல்களின்படி கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் இன்று (10.07.2020) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கோவிட்-19 தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள்/அறிவுரைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.

ஆணையாளர் அவர்கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது :

அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் உட்பட அனைவரும் ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அலுவலக முகப்புவாயிலில் கண்டிப்பாக கைகளை கழுவுவதற்கு ஏதுவாக கிருமி நாசினி (Sanitizer) வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கூட்டுறவு அங்காடிகளில் 1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள கடைகளை இரண்டாக பிரித்தல் அல்லது பெரிய பரப்பளவு கொண்ட இடங்களுக்கு மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குள் பெருநகர சென்னை மநாகராட்சிக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைத்து கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்ந்தவர்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.பாலசுப்பிரமணியம், கூடுதல் பதிவாளர் . கிரேஸ் லால்ரின்டகி பச்சுவாவ், பெருநகர சென்னை மாநராட்சி துணை ஆணையாளர் ஜெ.மேகநாத ரெட்டி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே….

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/563770-consultation-with-madras-corporation-commissioners-with-banks-co-operatives-and-consumers.html