சென்னையில் ஒரே நாளில் 14,355 பேருக்கு இ-பாஸ் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,355 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

மண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது. மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், 17-ந் தேதி முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 14,335 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர இ-பாஸ் கோரி விண்ணப்பித்த 11,608 பேரும் உள்ளடங்குவர். அதே சமயம், இதர மாநிலங்களில் இருந்து சென்னைக்குள் வர 1072 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 1500 பேருக்கு இதர மாவட்டங்களில் இருந்து சென்னை வர இ-பாஸ் வழங்கப்பட்டது, இதர மாநிலங்களிலிருந்து 150 – 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/08/19073213/Epass-for-14355-people-in-one-day-in-Chennai.vpf