சென்னை டே: மாநகரின் பாரம்பரியமிக்க ஆறு இடங்கள்!! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் “சென்னை டே”வாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 381 ஆம் ஆண்டு சென்னை தினம் நாளை (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தில், யுனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சென்னையின் பாரம்பரிய பெருமைமிக்கவற்றில் ஆறு இடங்கள் குறித்து இங்கு காண்போம்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையாக சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கிலேயர்களின் முயற்சியின் பயனாக, கடந்த 1963 ஆம் ஆண்டு, இந்தக் கோட்டையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சென்னைக்கு சுற்றுலா வரும் அனைவரும் பார்க்க விருப்பும் இடங்களுள் ஒன்றாக, தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலகமாக இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை திகழ்கிறது.

ரிப்பன் மாளிகை

சென்னையில் இருக்கும் பாரம்பரியமிக்க கட்டிடங்களில் ஒன்றாக ரிப்பன் மாளிகை விளங்குகிறது. லோகநாத முதலியார் என்பவரால், 1909 ஆம் ஆண்டு தொடங்கி, 1913 ஆம் ஆண்டு வரை இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டடது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க இந்த வெள்ளைநிற கட்டிடத்தில்தான், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

நேப்பியர் பாலம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைப்பதற்காக நேப்பியர் பாலம் கட்டப்பட்டது. சென்னை மாநகரின் பழமையான பாலங்களில் ஒன்றான இப்பாலம், 1869 இல் பிரான்சிஸ் நேப்பியர் என்பவரால் கட்டப்பட்டது. இதன் காரணமாகவே பாலத்துக்கு அவரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. . 149 மீட்டர் நீளம், 6 வளைவுகளுடன் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள நேப்பியர் பாலம், வடசென்னையையும், தென் சென்னையும் இணைக்கும் கரமாக நேப்பியர் பாலம் திகழ்கிறது.

மெட்ராஸ் போர் கல்லறை

இரண்டாம் உலகப்போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக 1952ம் ஆண்டு மெட்ராஸ் போர் கல்லறை நிறுவப்பட்டது. சென்னை நந்தனத்தில், 2.75 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல் எதுவும் புதைக்கப்படாமல், அவர்களுடைய பெயர்கள் அச்சடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

அரசு அருங்காட்சியகம்

சென்னை எழும்பூரில், 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டாக அமைந்துள்ளது அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. சிற்பங்கள், தொல்லியல், நாணயவியல் முதலியவை உள்ளடங்கிய 40க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னையில் குடும்பத்துடன் சென்று கண்டுகளிக்க வேண்டிய இடங்களில் அரசு அருங்காட்சியகத்துக்கு முக்கிய இடம் உண்டு.

சாந்தோம் தேவாலயம்

கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக சாந்தோம் தேவாலயம் (சர்ச்) திகழ்கிறது. சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் சாந்தோம் தேவாலயம், 16 ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. அதன்பின் 1893 இல், ஆங்கிலேயர்களால் புனரமைக்கப்பட்டது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/most-heritage-place-which-everyone-should-see-in-chennai/articleshow/77677849.cms