சென்னைக்கு யார் வந்தாலும் குவாரண்டைன் கிடையாது: அதிரடி அறிவிப்பு! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,35,597 ஆக உள்ளது. இதில் 13,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் குறைந்து வந்த பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலிருந்து சென்னை வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் இல்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருபவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனாவை எதிர்த்து தொடர்ந்து இன்னும் 3 மாதங்களாவது போராடவேண்டிய நிலை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது அன்லாக் 4.0, கதிகலங்கிப் போன தலைநகர்!

கொரோனா பரவ ஆரம்பித்த சமயம் முதல் தற்போது வரை தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது தனிமைப்படுத்துதல் ஆகும். தனிமைப்படுத்துதல் அச்சம் காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் சற்று குறைவு இருந்தது. ஆனால், சென்னைக்கு யார் வந்தாலும் தனிமைப்படுத்துதல் இல்லை என்ற அறிவிப்பு ஒருபுறம் திருப்தியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் நோய் தொற்று குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை பொது மக்கள் சரியாக பின்பற்றுவார்களா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வருகிற 30ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இபாஸ் ரத்து, பேருந்து போக்குவரத்து அனுமதி, வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி என்று ஏராளமான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளார்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

உலகில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வர்த்தகம் உள்பட அனைத்தையும் திறந்து விட்டு இருப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோணன் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். வைரஸ் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை செய்ய வேண்டும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நான்கு மதிரங்களை கண்டிப்பான பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ள நிலையில், சென்னைக்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/there-is-no-quarantine-for-who-are-all-coming-to-chennai-from-any-districts-says-corporation-commissioner/articleshow/77872963.cms