சென்னை அணிக்கு கோப்பை * வாட்சன் நம்பிக்கை – தினமலர்

சென்னைச் செய்திகள்

துபாய்: ‘‘ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லை என்றாலும் கோப்பை வெல்ல போராடுவோம்,’’ என வாட்சன் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு எமிரேட்சில் செப். 19–நவ. 10ல் நடக்கவுள்ளது. இதற்கான சென்னை அணியில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகினர். இவர்களுக்கு மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து சென்னை அணி வீரர் வாட்சன் கூறியது:

சென்னை அணியில் ரெய்னா அணியில் இல்லாதது இழப்பு தான். இவருக்கு மாற்று வீரரை கண்டறிவது கடினம். ஏனெனில் ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதேநேரம் முரளி விஜய் போன்ற ‘டுவென்டி–20’ல் அசத்தும் வீரர்களையும் அணியில் வைத்துள்ளோம் என்பதால் கோப்பை வெல்ல கடைசி வரை போராடுவோம். கடந்த சில ஆண்டுகளில் இவருக்கு, களமிறங்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையில் முரளி விஜய் சிறந்த வீரர். இந்த சீசனில் இவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கலாம்.

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சென்னை அணிக்காக கடந்த சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டார். இவர் இல்லாத நிலையில் கோல்கட்டா அணியில் இருந்து வந்த பியுஸ் சாவ்லா நம்பிக்கை தருவார் எனத் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கு கோப்பை

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறுகையில்,‘‘ரெய்னா, தோனி விலகினாலும், சென்னை அணியில் இன்னும் சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் தான் மாற்று வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இத்தொடரில் தோனி அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது,’’ என்றார்.

Advertisement

Source: https://sports.dinamalar.com/2020/09/1599756507/IncrediblyhardreplaceSureshRainaChennaihavedepthShanewatson.html