சென்னையில் வீட்டு வாடகை கேட்டதால் குடும்பத்தையே கத்தியால் குத்திய வாடகைதாரர்.. இளம் பெண் பலி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை கத்தியால் வாடகைதாரர் குத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டாம் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் நாராயணன். பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

கொரோன காலத்தின் ஊரடங்கு என்பதால் வேலையின்றி 5 மாத வாடகை பாக்கி கொடுக்காத நாராயணனை வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் பலமுறை வாடகை கேட்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

imageநெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்

வாக்குவாதம் முற்றியது

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பிய நாராயணனிடம் மீண்டும் அவர் குடியிருக்கும் இரண்டாவது மாடிக்கு சென்று வாடகை குறித்து கேட்டுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த நாராயணனுக்கும் எதிர் தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது சத்தம் கேட்டு சந்திரமோகனின் மகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா இருவரும் மேலே சென்றிருக்கிறார்கள்.

3 பேர் படுகாயம்

இதைக் கண்டதும் ஆத்திரமடைந்த நாராயணன் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து சரமாரியாக சந்திரமோகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யாவை தாக்கியிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் சுகன்யா வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மற்ற இருவருக்கும் வயிற்றுப் பகுதியில் பலத்தகாயங்கள் ஏற்பட்டுள்ளது,

கேஎம்சி மருத்துவமனை

உடனே தகவல் அறிந்து வந்த சூளைமேடு போலீசார் மூவரையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷின் மனைவி சுகன்யா உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆத்திரத்தில் கொலை செய்த நாராயணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

நேரில் பார்த்தவர் விளக்கம்

சம்பவத்தை நேரில் பார்த்த மாணிக்கம்மாள் கூறுகையில், நான் நாராயணன் வீட்டின் பக்கத்தில் வசித்து வருகிறேன் இரவு என்பதால் உள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன், திடீரென்று சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பொழுது நாராயணன் கத்தியை வைத்து அவர்கள் மூவரையும் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் சுகன்யா மயங்கி விழுந்தார், மற்ற இருவரும் காயங்களுடன் அலறினர், போலீசார் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இவர்கள் இருவரிடையே அடிக்கடி வாடகை குறித்ததான பிரச்சனை நடந்து வந்தது என்றார்..

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/in-chennai-a-tenant-stabbed-a-house-owner-with-a-knife-for-asking-for-house-rent-a-woman-killed-398859.html