அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள் சேவை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்லாக் செயல்முறையின்படி பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட நாடு முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

தொடர்ந்து, தமிழகத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வுகளில் முக்கிய அம்சமாக, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகரிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் சேவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் பயணிகள் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்… கொரோனா தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடக்கம்!

இருப்பினும், சென்னையில் புறநகர் ரயில் சேவை மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் இடம்பெறவில்லை.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-suburban-train-service-likely-to-start-from-october-7/articleshow/78370084.cms