ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – மாநகராட்சி தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டத்தில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போது மெல்ல மெல்ல கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 0.5 சதவீதம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்திருந்தது. தற்போது மேலும் 2.5 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதம், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதம், கோடம்பாக்கம் 2.7 சதவீதம், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/10/05034737/27-increase-in-corona-Chennai-due-to-curfew-relaxation.vpf