சென்னை – சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜகவினர் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சூப்பர் மார்கெட்

  • News18
  • Last Updated:
    October 8, 2020, 1:32 PM IST
  • Share this:
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடையை காலி செய்யக் கூறி, ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

ஒப்பந்தப்படி கடையை காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாக ஷாநவாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டி கடையை காலி செய்ய மறுத்துள்ளனர். இப்படியாக,  இரு தரப்புக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், இன்று காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை  நொறுக்கி, பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர்.

பின்னர் சூறையாடிய பல லட்சம் மதிப்பிலான பொருட்களை குட்டி யானை லோடு ஆட்டோ வாகனத்தில் வைத்து திருடி சென்றுள்ளனர். ஊழியர்கள் 6 பேர் மட்டுமே இருந்த நிலையில், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்ட குதுப் எனும் ஊழியரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டி உள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்ற ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பிச் சென்றுவிட, கடைக்குள் இருந்த 21 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவின் ஊடகப்பிரிவு, கலை இலக்கிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த செயலில் ஈடுபட்டனர். ரஃபீகாவுக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல் சி.சி.டி.வி. டி.வி.ஆரை (காட்சிகள் சேமிக்கப்படும் கருவி) எடுத்துச் செல்வதற்கு பதிலாக கம்ப்யூட்டரில் உள்ள சி.பி.யுவை திருடி சென்றதால், சி.சி.டி.வி. டி.வி.ஆர் போலீசாரிடம் சிக்கியுள்ளது.


First published: October 8, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-chennai-super-market-vandalized-bjp-members-arrested-san-anb-355205.html