சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் சேவை நேரம் நீட்டிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயிலின் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை

மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தற்போது காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பணியாளர்கள், மெட்ரோ ரெயில் பயணிகள் மற்றும் உள்நாட்டு/ வெளிநாட்டு பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் நீட்டிக்கப்படுகின்றன.

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 05.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும். உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை உச்ச மணி நேரம் இல்லாமல் இயங்கும்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணித்திற்காகவும் மேற்கொண்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ இவ்வாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/07160437/In-Chennai-Metro-train-from-tomorrow-Extension-of.vpf