பாட்டியின் சொத்துகளை அபகரித்த பேத்தி: ஆட்சியர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

வெற்று காகிதத்தில் கைரேகை பெற்று, பேத்தி அபகரித்த சொத்துகளை மீட்கக் கோரி பாட்டி தொடர்ந்த வழக்கில், திருவள்ளூர் ஆட்சியர் விசாரணை நடத்தி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூரைச் சேர்ந்த 95 வயதான சாலம்மாள் என்ற மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது மகள்வழி மூத்த பேத்தியான லோகநாயகி, தன்னிடம் வெற்று காகிதத்தில் கைரேகை பெற்று சொத்துகளை அவரது பெயருக்கு மாற்றினார்.

இந்த மோசடி தெரிந்ததும் அந்தபத்திரப்பதிவை ரத்து செய்து, சொத்துக்களை 2-வது பேத்திபெயரில் எழுதினேன். அதன்பிறகு லோகநாயகி தொடர்ந்த சிவில் வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டுநவம்பரில், இதுதொடர்பாக மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர்பராமரிப்பு சட்டத்தின்கீழ் தனது பேத்தி லோகநாயகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக இருதரப்பையும் அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, 4 வாரங்களில் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/601332-madras-high-court.html