சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்கும் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.

சென்னை,

‘நிவர்’ புயல் நேற்று கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக் கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதன்படி இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தசூழலில் அதி தீவிர புயலாக இருந்த ‘நிவர்’, கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  

இந்நிலையில் சென்னையில் விமான சேவை இன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளது. தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது. காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். தற்போது காற்று வீசுவதால் விமான போக்குவரத்து 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/11/26072645/The-flight-will-start-at-9-am-in-Chennai.vpf