விரைவில் சகஜ நிலை: சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாதவன் பாராட்டு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

நிவர் புயல் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாதவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ அதிதீவிரப் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில், புதுச்சேரி அருகே நேற்று (நவம்பர் 26) அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் கடந்த 25, 26ஆம் தேதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்தது. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகார்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியின் பணியைப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் பணிகள் தொடர்பாக மாதவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சென்னை மாநகராட்சி, அனைத்து அதிகாரிகள் மற்றும் பொறுப்பிலிருப்பவர்கள் என அனைவரும் சகஜ நிலை உடனடியாகத் திரும்புவதற்குத் தேவையான அற்புதமான பணியைச் செய்திருக்கிறார்கள். உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்”.

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

Source: https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/605799-madhavan-thanked-chennai-corporation.html