சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சேலம் – சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னை-சேலம் இடையே 276 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் என 50-க்கும் மேற்பட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் 8-ந்தேதி 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) சார்பில் கடந்த ஆண்டு மே 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்,சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில்,  8 வழிச்சாலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ்  மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கனவே சென்னை- சேலம் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம் எனவும் புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை எனவும் மறு ஆய்வு மனுவில் தெரிவித்துள்ளார். 

Source: https://www.dailythanthi.com/News/India/2021/01/08105719/New-pettion-in-SC-on-chennai–salem-greenways-road.vpf