சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பைகளும், 700 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு திடக்கழிவுகளும் உருவாகின்றன. இவற்றில் குடியிருப்புகளிலிருந்து 68 சதவிகிதம், வர்த்தகரீதியான இடங்களிலிருந்து 16 சதவிகிதம், அரங்கங்கள், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 14 சதவிகிதம், தொழிற்சாலைகளிலிருந்து இரண்டு சதவிகிதம் என குப்பைகள் உருவாகின்றன. மருத்துவக்கழிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நியமித்திருக்கும் ஏஜென்டுகள் மூலமாக அகற்றப்பட்டுவருகின்றன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தற்போது 19,300-க்கும் மேற்பட்ட தூய்மைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மட்டும் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இவற்றில் அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உர்பேசர் – சுமீத் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன. அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்கள் ராம்கி என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
Source: https://www.vikatan.com/government-and-politics/politics/sudden-dismissal-of-550-contract-sanitation-workers-in-chennai-corporation