புகாரின் பேரில் பூந்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர்தான் மேரிலதாவை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சந்தோஷ்குமார், இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா காலம் என்பதால் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போதுதான் இணையதளம் மூலம் மேரிலதாவின் வேலைக்கான விண்ணப்பத்தைப் பார்த்த சந்தோஷ்குமார் அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியிருக்கிறார்.
சந்தோஷ்குமார் இணையதள சூதாட்டத்துக்கு அடிமையானவர். அதனால், அந்த விளையாட்டு மூலம் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருக்கிறார். இவர், பகுதி நேரமாக வீடுகளுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் மற்றும் உணவு டெலிவரி ஆகிய வேலைகளைச் செய்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் இணையதள சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதனால்தான் மேரி லதாவிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கார்த்திக், அரவிந்தன் என்ற பெயர்களில் போனில் பேசி பணத்தை ஏமாற்றியிருக்கிறார். தற்போது சந்தோஷ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது”என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-kovilambakkam-engineer-over-fraud