சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் இயங்கி வரும் சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண கொள்ளைக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-ல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட்டை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பான வழக்கில் பண்ருட்டி வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை போரூர் அருகே மதுரவாயல்- தாம்பரம் சாலையில் உள்ள சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.

கடந்த வாரம் கால் டாக்சி ஓட்டுநர் ஒருவருக்கும் இந்த சுங்க சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே இன்று சுங்க சாவடி அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/toll-plaza-near-chennai-vandalised-by-tvk-cadres-409842.html