மெட்ராஸ் வரலாறு: “சென்னை கூவம் ஆற்றில் ஒரு படகு பயணம்” | பகுதி – 2 – விகடன்

சென்னைச் செய்திகள்

என்னுடைய பதின்ம வயதின் தொடக்கத்தில் சென்னையில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக சென்னை மின் வாரியக் கட்டடம் இருந்தது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அதில் என் அப்பா வேலை பார்த்தார். என் தந்தை பாலகிருஷ்ணன் அப்போது மின்வாரியத்தின் சென்னை செயலகத்தில் நல்ல பொறுப்பில் இருந்தார். இப்போதிருக்கும் 10 மாடி மின்வாரியக் கட்டடம் அப்போது இல்லை. அதற்கு அருகே ஒரு நான்கு மாடிக் கட்டடம் மட்டும். அதில்தான் மின்வாரிய செயலகம் செயல்பட்டது. அப்படி அவரைப் பார்க்கச் சென்றபோது எனக்கு அந்தக் கூவம் படகுப் பயணம் வாய்த்தது.

அது 1975-ம் வருடம். சீருடை அணிந்த படகோட்டிகள் படகில் இருந்தனர். நான், ‘படகில் போகலாம்பா…!’ என்று அப்பாவிடம் அடம்பிடித்தேன். அவர் படகையும், என்னையும், கூவத்தையும் மாறி மாறிப் பார்த்தார். ஒரு முடிவுக்கு வந்தவராகப் படகுத் துறையை நோக்கி நடந்தார். டிக்கெட் வாங்கிக்கொண்டு படகில் ஏறினோம். அந்தப் படகோட்டியும் என்னைப் போலவே சந்தோஷப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது. இருவரையும் ஏற்றிக்கொண்டு அந்தத் துடுப்புப் படகு, மெல்ல அசைந்து அசைந்து அந்த கரிய நீரில் மிதந்தது. படகில் ஏறியதும் எல்லோரையும்போல தண்ணீரில் கையைவைக்க நினைத்தேன். அப்பா, ‘தண்ணீரைத் தொட்டுவிடாதே…!’ என்று தடை உத்தரவு போட்டார். தண்ணீரைத் தீண்டாமல் எப்படி பயணிப்பது? கைகளைக கட்டிவிட்டு நீந்தச் சொல்வது, ஹாண்டில் பாரைத் தொடாமல் பைக் ஓட்டுவது போன்ற சிரமம்தான் நீரில் கைபடாமல் படகில் பயணிப்பது. கூடவே அதிர்ச்சிகரமான முடிவை அப்பா எடுத்தார். ‘அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிடலாம்!’ என்றார்.

மின்வாரியத்துக்குப் பின்னால் படகில் ஏறி, கெயிட்டி திரையரங்கு அருகில் இறங்கிவிட்டதாக நினைவு. அவ்வளவு சிறிய பயணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் அப்பா போதும் என்று சொல்லிவிட்டார்.

கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே, கூவத்தின் சகிக்க முடியாத வாசனையைப் பொறுத்துக்கொண்டு அதில் அப்பா பயணித்தார் என்பதை வெகு நாட்களுக்குப் பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்தவரை படகில் பயணிக்க சந்தோஷம் மட்டும்தான். அரசியல் பாசமோ, வாசமோ எதுவும் அப்போது தெரியவில்லை. அப்பாவுக்கு தி.மு.க மீது இருந்த பாசத்தையும் மீறி, படகில் ஏறிய அடுத்த நிறுத்தத்திலேயே இறங்க வைத்துவிட்டது கூவத்தின் நாற்றம். அது மட்டும் அல்ல; கூவம் படகுப் பயணத்துக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. படகில் ஏறிச் செல்பவர்களையும் பலரும் விநோதமாகப் பார்த்தனர் என்றே இப்போது உணர்கிறேன்.

அந்தப் படகுத் துறைகள் ஸ்பெர்டாங்க் ரோடு, கிரீம்ஸ் ரோடு, காயிதே மில்லத் கல்லூரி, கெயிட்டி தியேட்டர் என நான்கு அல்லது ஐந்து இடங்களில் சிலகாலம் இயங்கியது. கூவத்துக்கு வரும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதில் பெருத்த சிரமம் இருந்ததால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. சீருடை அணிந்த படகோட்டிகள் என்ன ஆனார்கள், அந்தப் படகுகள் எங்கே… ஒரு மாபெரும் முயற்சியின் அத்தாட்சியாக அந்தப் படகுத் துறைகளின் சிதலங்கள் இப்போதும் இருக்கின்றன. மீண்டும் கூவத்தைக் குளிப்பாட்ட அடிக்கடி ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வரும்போதெல்லாம் இந்த ஆற்றின் அழுக்காற்றை சீர்படுத்தி அழுக்காறு (பொறாமைகொள்ளுதல்) ஏற்படுத்துவார்களா? என என் நெஞ்சம் பதைக்கும்.

இந்தத் தொடரை வரவேற்று பலரும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் குமார் என்பவரின் கடிதம் எனக்கும் கூவத்தில் மீன் பிடிக்கச் சென்ற நினைவுகளை ஏற்படுத்தியது. மழை நாளில் அமைந்தகரைக்கு (ஆற்றங்கரையில் அமைந்த அந்த ஊருக்கு என்ன அழகான பெயர்?) அந்தப் பக்கத்தில், கூவத்தில் நல்ல நீர் ஓடும். துணி சலவை செய்பவர்களுக்கு அதுதான் இடம். இல்லாவிட்டால் சைதாப்பேட்டை ஆற்றில் தோய்ப்பார்கள். அமைந்தகரை ஆற்றின் ஓரத்தில் சுரப்பு நீர் எடுத்துக் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை நாட்களில் மீன்கள் எதிர் திசையில் துள்ளும். என் வயது பையன்களோடு வந்து மீன்பிடிக்கும் பெரியவர்களை பார்த்துக்கொண்டிருப்போம். மீன் சிக்கிவிட்டால் எங்களுக்கே கிடைத்துவிட்டது மாதிரி திருப்தி. இன்னொரு வாசகர் கூவம் உருவாகும் இடத்தில் அதன் பெயர் கூபம் என்று தெரிவித்திருந்தார். உண்மைதான். கூபம் என்றால் ஆழமான நீர்நிலை என்று அர்த்தம்.

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-a-boat-trip-on-the-river-cooum-in-chennai