சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த பத்தாண்டுகளாக அதிமுக வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்தனர்.

பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததும் அதிமுக வழக்கறிஞர்களின் பலர் அரசு வழக்கறிஞர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞராக முன்னாள் எம்பி சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார்.

தமிழக அரசு கரோனா கட்டுப்படுத்தல் பணியில் தற்போது தீவிரமாக உள்ளதாலும், உயர் நீதிமன்றங்களில் கோடை விடுமுறை கால நீதிமன்றங்கள் செயல்படுவதாலும் ஏற்கெனவே அரசு வழக்கறிஞர்களாக பணிபுரிபவர்கள் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் வரை பணியில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தற்காலிகமாக அரசு வழக்கறிஞர்களாக நியமிக்குமாறு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி தற்காலிக அரசு வழக்கறிஞர்களை நியமித்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சிவில் வழக்குகளில் ஆஜராக பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி. ஹர்ஷா ராஜ், எஸ். ஜான் ஜெ ராஜா சிங், ஏ. ஷப்னம் பானு ஆகியோரும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராக ஏ. தாமோதரன், ஆர். முனியப்பராஜ், ஜெ. சி. துரைராஜ், இ. ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ. கோபிநாத் ஆகியோரும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சிவில் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், பி.திலக் குமார், ஏ.கே.மாணிக்கம், ஆர்.பாஸ்கரன் ஆகியோரும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராக எஸ்.ரவி, எம். முத்துமாணிக்கம் ஆகியோரும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிந்து புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/670797-temporary-lawyers-appointed-to-chennai-hc-and-madurai-hc-bench.html