சென்னை: சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15 அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்ததில் ரயில்வே காவலர் மற்றும் பொறியாளர் ஆகியோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது . இந்நிலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் பணியாளர்கள் தொழிற்சாலையின் நுழைவு வாயிலில் உள்ள 15 அடி உயரமுள்ள இரும்பு கேட்டை மூடியுள்ளனர்.
அப்போது கேட்டின் அடிப்பகுதியில் உள்ள வீல் அதன் அச்சிலிருந்து சரிந்து கேட் கீழே சாய்ந்தது. கதவின் அருகே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலரான இலக்குமணன் (41) மற்றும் மூத்த பொறியாளரான நற்குணன் (55) ஆகியோர் மீது கேட் விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஐசிஎப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐசிஎப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/2-died-after-15-feet-high-gate-collapsed-in-icf-chennai-421236.html