சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆட்டோக்களை ஆம்புலன்ஸ் ஆக மாற்றி வியாசர்பாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் சேவை செய்து வருகிறார்கள்.
சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா படையெடுப்பாக இருப்பதால் அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்பினரும், சமூகத்தினரும் சேவைகளில் குதித்துள்ளனர்.
எல்லோரும் இணைந்து கொரோனா அரக்கனை ஒழிக்க உறுதி பூண்டு சேவைகளை செய்து வருகின்றனர். அதுகுறித்த தொகுப்புதான் இது.
சூப்பர்.. இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவை.. வியாசர்பாடி மாணவர்களின் வியக்கும் மனிதநேய சேவை..!
அதிகரித்து வரும் கொரோனா
அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள் போதிய அளவு இல்லை என்ற தகவலானது பரவி வருகிறது. இந்த இக்கட்டான சூழலிலும் கொரோனா நோயாளிகளுக்கு வியாசர்பாடியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், இலவசமாக ஆட்டோவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அமைத்து ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கும் சேவையை செய்து வருகின்றனர்.
தன்னார்வ அமைப்பு
வியாசை தோழர்கள் என்ற தன்னார்வ அமைப்பினை ஏற்படுத்தி 24 மணி நேரமும் இந்த இலவச ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை செய்து வருகின்றனர். 50 கி.மி தொலைவிற்கு சேவையை செய்ய தொடங்கிய வியாசை தோழர்களுக்கு முதல் அழைப்பே கும்மிடிப்பூண்டியிலிருந்து வந்தது. இருப்பினும் அந்த நோயாளிக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உதவியை செய்து உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற செய்துள்ளனர்.
ஆட்டோ சேவை
இதுபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது எங்கள் சக்திக்கு முடிந்த சேவையை செய்து கொண்டு வருகிறனர். எங்களை அணுகும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கும் வரையில் தங்கள் ஆட்டோக்களில் அமர்ந்து ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம். இந்த சேவையில் 8 ஆட்டோக்கள் பயன்படுத்துகின்றனர். அதில் 5 ஆட்டோக்களை கொரோனா நோயாளிகளுக்கும், 3 ஆட்டோக்களை அவசர தேவைகளுக்கும் உபயோகிப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து சேவை
மேலும் இதற்காக ஆகும் செலவினை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அளிக்கும் உதவித் தொகையின் மூலமே தொடர்ந்து சேவையை செய்து வருகின்றனர். ஏழை எளிய நோயாளிகள் மட்டுமல்ல உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் அவசரத் தேவைக்கு தங்களை எந்த நேரத்திலும் அழைக்கலாம் என்கிறார் வியாசை தோழர் அமைப்பின் ஒருவரான வழக்கறிஞர் சரத்குமார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-auto-ambulance-service-by-law-students-421359.html