சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக 57 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைய தொடங்கியதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மின்சார ரெயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வார நாட்களில் 151 மின்சார ரெயில் சேவை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (31-ந்தேதி) முதல் மின்சார ரெயில் சேவை அதிகரித்து சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 151-லிருந்து 208 மின்சார ரெயில் சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 86 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 32 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 208 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/05/31002028/Electric-train-service-increase-in-Chennai-from-today.vpf