சென்னை: நள்ளிரவில் ஸ்கெட்ச்; ரெளடி சி.டி.மணியை மடக்கிய போலீஸ் – துப்பாக்கிச் சூட்டில் எஸ்.ஐ காயம் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னையில் புதிய கமிஷ்னராக பொறுப்பேற்றிருக்கும் சங்கர் ஜிவால், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷ்னர் கண்ணன், தென்சென்னை (பொறுப்பு) இணைக்கமிஷ்னர் பாலகிருஷ்ணன், தி.நகர் துணைக்கமிஷ்னர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் மேற்பார்வையிலான தனிப்படையினர் தென்சென்னையில் உள்ள ரவுடிகள் குறித்து தீவிரமாக கண்காணித்தனர்.

தனிப்படையில் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், எஸ்.ஐ-க்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் நேற்றிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போரூர் மேம்பாலத்தில் ரவுடி சி.டி மணி காரில் செல்லும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது.

காயமடைந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

உடனடியாக தனிப்படை போலீஸார் சி.டி மணியைப் பிடிக்க விரைந்தனர். எஸ்.ஐ-க்கள் கனகராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் துணிச்சலுடன் சி.டி மணி சென்ற காரை மடக்கினர். அப்போது போலீஸாரை நோக்கி சி.டி.மணி துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஒரு குண்டு, எஸ்.ஐ- பாலகிருஷ்ணனின் கையை துளைத்தது. அதனால் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து போலீஸார் சி.டி மணியை மடக்கினர். அப்போது காரை விட்டு கீழே இறங்கிய அவர், மேம்பாலத்திலிருந்து குதித்தார். அதில் அவரின் இடது கால், கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-rowdy-cdmani-in-close-encounter-si-injured-in-shooting