மீண்டும் சிங்காரச் சென்னை : முதலில் செய்ய வேண்டியது என்ன? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

மீண்டும் சிங்காரச் சென்னை திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை அழகுபடுத்துதல் என்றதும் மகிழ்ச்சிக்குப் பதில் அச்சம்தான் ஏற்படுகிறது. காரணம், சென்னையை ‘அழகு’படுத்தும்போது அதில் சத்தமின்றிக் காணாமல்போகும் பன்முகத்தன்மையும் மக்கள்சார் அணுகுமுறையும்தான்.

விரட்டப்படும் மக்கள்

மேம்பாலங்களைக் கட்டுதல், சாலைகளை விரிவுபடுத்துதல், பொதுவாக அழகுபடுத்துதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்களுக்குச் சில கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தான் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புதிய கட்டுமானங்கள் அல்லது சாலை விரிவாக்கங்களுக்காக வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படும் மக்களைச் சென்னைக்கு வெளியே தொலை தூரத்தில் வசிக்கச் செய்வதுதான் அரசின் கொள்கையாக இருக்கிறது.

இப்படித்தான் நகரத்திற்கு வெளியே கண்ணகி நகர் போன்ற குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. சென்னையை அழகுபடுத்துவதாகவும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகவும் சொல்லி அங்கே வசிக்கும் அடித்தட்டு மக்களை வெளியேற்றுவது வழக்கமாக நடப்பதுதான். இப்படி அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்கள் வாழிடத்திலேயே மாற்று இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே சர்வதேச அளவிலான நடைமுறை. ஆனால், சென்னையின் அடித்தட்டு மக்கள் தொலைதூரத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. சென்னை நகரில்தான் அவர்களுடைய வாழ்வாதாரம், கல்வி ஆகியவை இருக்கின்றன. சென்னை மக்களுக்குத் தேவையான பல்வேறு பணிகளைச் செய்பவர்களும் இவர்கள்தான். ஆனால், இவர்களை விரட்டுவதுதான் அரசுகள் முதல் வேலையாக முன்னெடுக்கும் வேலையாக உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவிர்க்க முடியாமல் இடப்பெயர்ச்சி செய்தே ஆக வேண்டும் என்றால் அவர்களுடன் கலந்து பேசி, திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அதன் பிறகே இடப்பெயர்ச்சிக்கான வேலைகளைத் தொடங்க வேண்டும்.
அவர்கள் வாழிடத்தில் அருகிலேயே மாற்று ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

குடிசைவாழ் மக்களை நகரத்தின் களங்கமாக எண்ணும் போக்கைக் கைவிட்டு அவர்கள் வாழிடங்களில் வசதியும் நேர்த்தியும் நிரம்பச் செய்ய வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கண்ணகி நகர் போன்ற இடங்களில் வசதிகளையும் கல்வி, மருத்துவம் முதலான அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏற்பாடுககளையும் செய்துதர வேண்டும்.

பாலங்களின் கோலங்கள்

சென்னையின் உள்கட்டமைப்பு வசதியைப் பெருக்கியதில் மேம்பாலங்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேம்பாலங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான, பரபரப்பான சாலைச் சந்திப்புகளில் அமையும் மேம்பாலங்கள் பலனளிக்கின்றன. அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு அருகே அமைந்துள்ள மேம்பாலம் என்று சில மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அந்தப் பகுதியில் ஓரிரு தடங்களிலேனும் வாகனங்கள் தேங்கியிராமல் செல்லவும் வழி வகுக்கின்றன.

ஆனால், பல இடங்களில் மேம்பாலங்கள் இத்தகைய பங்கை ஆற்றுவதில்லை. போக்குவரத்து நெரிசலைக் கூட்டவே பயன்படுகின்றன. “மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை விரைவாகச் சென்றடைய உதவுகின்றன” என்று கேலியாகக் குறிப்பிடப்படுவதுண்டு. சென்னையின் ஒரு சில மேம்பாலங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

சில மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலைக் கூட்டவே அதிகம் பயன்படுகின்றன. மேம்பாலங்கள் மிகவும் குறுகலாக இருப்பதல் அவற்றில் விபத்துக்கான வாய்ப்புகள் உருவாகின்றன. எனவே பெரும்பாலும் இவற்றை ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்த வேண்டியதாக ஆகிவிடுகிறது. எடுத்துக்காட்டாக கோட்டூர்புரம் அடையாறு சந்திப்பில் அமைந்த மேம்பாலம். இந்த மேம்பாலம் மிகவும் குறுகியது என்பதால் பெரும்பாலும் ஒருவழிப் பாதையாகவே பயன்படுகிறது. மேம்பாலத்தின் இரு முனைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பதைக் காணலாம். மேம்பாலத்தின் மீது ஏறுவதும் அதிலிருந்து இறங்குவதும் கடினம் என்றால் அப்புறம் எதற்காக மேம்பாலங்கள்?

பீட்டர்ஸ் சாலையில் அருகருகே இரண்டு மேம்பாலங்கள் இருக்கும். எதற்காக இப்படி அமைத்தார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் புரியாத புதிர். இரண்டாவது மேம்பாலத்தை விட்டு இறங்கியதும் ஐஸ் ஹவுஸ் போக்குவரத்து உங்களை வரவேற்றுத் தன் மடியில் போட்டுக்கொள்ளும். அரை மணிநேரத்திற்கு உங்களை விடவே விடாது.

தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே ஆண்டு முழுவதும் அசாத்தியமான கூட்டம் கூடும். இங்கே பெரியதொரு பாலம் கட்டப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் ஓரளவு சீரடைந்தது. ஆனால், பாலத்தின் இறக்கத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் நெரிசலுக்கு இன்னமும் விடிவு இல்லை. பாலம் பேருந்து நிலையத்தைத் தாண்டிச் சென்றிருந்தால் இந்தச் சிக்கலைப் பெருமளவு தீர்த்திருக்கலாம். துணி, நகைக்கடைகளுக்குச் செல்பவர்களும் வாகனங்களும் ஒரே இடத்தில் குவியும் நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம். தொலைநோக்கின்றி வடிமைக்கப்பட்ட இந்தப் பாலம் தன்னுடைய நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை.

பல மேம்பாலங்களின் கீழே மக்கள் நடப்பதற்கே இடம் இல்லை. நடைபாதைகள் மிக மிகக் குறுகியதாக இருக்கும், அல்லது இருக்கவே இருக்காது. நகரம் என்பது வாகனங்களுக்கு மட்டும்தான் என்னும் எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட மேம்பாலங்கள் இவை.

நீர்நிலைகள் பெருகட்டும்

பெரும் நதிகளும் ஏரிகளும் பல்வேறு நீர்நிலைகளும் நிறைந்ததாக இருந்த சென்னை இன்று வறண்ட பூமியாக உள்ளது. கூவம், அடையாறு ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும். மோசமாகிப்போன நதிகளை மீட்டெடுத்த எடுத்துக்காட்டுக்கள் உலக அளவில் பல உள்ளன. மனமிருந்தால் வழி பிறக்கும். சென்னை முழுவதும் சிறிதும் பெரிதுமான குளங்களையும் அமைக்க வேண்டும்.

அழகு என்பது புறம் மட்டுமல்ல. அகமும் சேர்ந்ததுதான். சென்னையின் அகத்தை அழகுபடுத்த அதன் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. சென்னையின் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஆகியவற்றை அவசரப் பணிகளாகக் கருதிச் சரிசெய்ய வேண்டும்.

பொதுக் கழிவறைகள் எங்கே?

சென்னையில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதாக மாநகராட்சியின் புள்ளிவிவரம் கூறுகிறது. சென்னையில் பல கழிப்பிடங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அவை பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கின்றனவா? பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா? குறிப்பாகப் பெண்கள் பயன்படுத்துமளவுக்கு அங்கு பாதுகாப்பான சூழலும் தூய்மையும் இருக்கின்றனவா?

குடலைப் பிரட்டும் துர்நாற்றம்தான் சென்னையின் பொதுக் கழிவறைகளின் பொது அடையாளம். கழிவறை கண்ணுக்குப் படுவதற்கு முன்பே மூக்குக்குத் தெரிந்துவிடும். இப்படிப்பட்ட கழிவறைகளைச் சீரமைப்பது சிங்காரச் சென்னையின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

சென்னையின் பன்முகத்தன்மை, அடர்த்தியான மரங்கள், நீண்ட கடற்கரைப் பகுதி, இரு பெரும் நதிகள் ஆகியவை சென்னையின் அழகுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னையின் ஜீவனாக இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவது, மரங்களை வெட்டிக் கட்டிடங்கள் கட்டுவது, தேவையில்லாத பாலங்களைக் கட்டிக்கொண்டேபோவது, கடற்கரைப் பகுதியின் தூயமையைக் கெடுப்பது ஆகியவற்றை முதலில் நிறுத்த வேண்டும். சென்னையின் நதிகளைத் தூய்மைப்படுத்த வேண்டும். நீர் வளத்தையும் காற்றின் தரத்தையும் கூட்ட வேண்டும். இவையெல்லாம் இல்லாவிட்டால் பெயரில் மட்டுமே சிங்காரம் இருக்கும்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/the-essentials-of-singara-chennai-projects/articleshow/83403109.cms