சென்னை: சென்னை பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை பகுதியில் நகை கடையில் அதன் உரிமையாளர் ஷட்டரை பாதியளவு சாத்திவிட்டு பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது, உள்ளே வந்து என்ன இப்படி கடையை திறந்து வச்சிருக்கீங்க என்று சத்தம் போட்ட போலீஸ்காரர்கள் இரண்டு பேர் ரூ.5 லட்சத்தை எடுத்து சென்றனர்.
இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான 2 போலீஸ்கார்களையும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் சென்னை பூக்கடை காவல் நிலைய போலீஸ்காரர்கள் முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு நகை கடையின் ஷட்டர் பாதியளவு திறந்திருந்தது.
ஏன் திறப்பு
இதை பார்த்த போலீசார், ஷட்டரை திறந்து உள்ளே சென்றுள்ளார்கள். அங்கு நகை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணம் எண்ணிக் கொண்டிருந்தனர். ஊரடங்கு காலத்தில் எப்படி கடையை திறக்கலாம், என கேட்டு பணத்தை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேசனுககு வருமாறு அவர்கள் கூறியுள்ளாரகள்.
எஸ்ஐக்கு தகவல்
அவர்களிடம் சமாதானம் பேசி பார்த்த கடை உரிமையாளர், கடைசியில் பூக்கடை காவல் நிலைய எஸ்ஜ கண்ணனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். அவர், கடைக்கு வந்த போலீஸ்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
பணம் தரவில்லை
இதன்பிறகு, நகை கடை உரிமையாளர் பணத்தை எண்ணி பார்த்தபோது 5 லட்சம் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, இரு போலீஸ்காரர்களும் பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.5 லட்சத்தை விசாரணை என்ற பெயரில் எடுத்துச் சென்றிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எந்த விசாரணையும் நடத்தவில்லை. பறிமுதல் செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.
போலீசில் புகார்
நடந்த சம்பவங்களை கூறி சென்னை பூக்கடை போலீசில் நகை கடை உரிமையாளர் புகார் செய்தார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முஜிப்ரகுமான், சுஜின் ஆகியோர் பணத்தை எடுத்து சென்றதும், இவர்களுக்கு உடந்தையாக எஸ்ஐ கண்ணனும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பரபரப்பு
3 பேரிடமும் துறைரீதியாக விசாரணை நடந்து வருகிறது. சென்னை பூக்கடை பகுதி நகை கடையில், பணத்தை எண்ணிக்கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸ்கார்களே 5லட்சம் பணத்தை திருடிய விவாகரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rs-5-lakh-cash-flush-in-chennai-jewelery-shop-2-cops-sacked-423671.html