சென்னை : கொரோனா தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னையை சேர்ந்த கௌதம் என்ற ஒருவர் ஆட்டோவை தடுப்பூசி விழிப்புணர்வு வாகனமாக உருவாக்கி உள்ளார்.
முன்னதாக இவர் கடந்த அலையின் போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட்டை வடிமைத்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இலவசமாக கொடுத்தார். இந்த முறை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆட்டோவை தடுப்பூசி விழிப்புணர்வு வாகனமாக மாற்றி உள்ளார்.
சென்னையில் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், குழாய் மற்றும் ஒட்டு மரப்பலகைகளின் மூலம் புதிய அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒரு கலைஞர் கௌதம். இவர் ‘Art Kingdom’ என்ற பெயரில் கலைபொருட்கள் வடிவமைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தடுப்பூசி ஆட்டோ
கௌதம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசிகு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி மருந்துபாட்டிகல்கள், விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ஆட்டோவை கலைநயத்துடன் வடிமைத்துள்ளார், சென்னையை சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த ஆட்டோ பலரையும் கவர்ந்துள்ளது.
தடுப்பூசி அட்டைகள்
இளம் நீல நிற பெயிண்ட்டை இந்த ஆட்டோ ரிக்ஷாவிற்கு அடித்துள்ள கௌதம், ஆட்டோவை சுற்றிலும் அட்டைகளை ஊசி போன்று கத்தரித்து பொருத்தி இருக்கிறார். அத்துடன் ஆட்டோவின் மேற்கூரையில் பெரிய அளவிலும், முன் ஹெட்லைட்டின் மீது சிறிய அளவிலும் தடுப்பூசி குப்பியின் மாதிரியை உருவாக்கி உள்ளார்.
ஒலிப்பெருக்கி
இத்துடன் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்டோவின் முன்பக்கத்தில் சிறிய பேனர் ஒன்று வைத்துள்ளார்.. மேலும் தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்களை தெரிவிக்க ஒலிப்பெருக்கி ஒன்றும் இந்த ஆட்டோவில் இருக்கிறது.
எப்படி ஆட்டோ உருவானது
இந்த ஆட்டோ தொடர்பாக கௌதம் கூறுகையில், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். சென்னை மாநகராட்சியிடம் இந்த ஆட்டோ பற்றி கேட்டேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி தான் நாங்கள் ‘தடுப்பூசி ஆட்டோ’ கொண்டு வந்தோம். இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டதால் தாமதமாகிவிட்டது.
தன்னார்வலர்கள் முயற்சி
இந்த ஆட்டோவை மணிகண்டன் என்பவர் தினமும் சென்னை மாநகராட்சிக்காக ஓட்டி வருகிறார். ஒவ்வொரு மண்டல வாரியாக தினமும் ஆட்டோவை ஓட்டி செல்வார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாத பகுதிகளின் பட்டியலை மண்டல மருத்துவ அதிகாரிகள் எங்களுக்கு வழங்குவார்கள் எங்களுடன் சென்னை மாநகராட்சி மண்டல மேற்பார்வையாளர்களும் வருவார்கள். நானும் பிற தன்னார்வலர்களும் தடுப்பூசிகள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்குவோம். தடுப்பூசி பற்றி தங்கள் கேள்விகளைக் கேட்க மக்களை ஊக்குவிக்கிறோம். சென்னை மாநகராட்சி இவ்வளவு முயற்சி செய்த போதிலும், நகரத்தில் பலருக்கு தடுப்பூசிகள் பற்றி இன்னும் தெரியவில்லை. ஒரு பயம் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது. தடுப்பூசிகள் கடந்த காலங்களில் எவ்வாறு நோய்களை ஒழித்தன என்பதை நாங்கள் அவர்களுக்கு விளக்கி வருகிறோம்” என்று சொல்கிறார் கௌதம உற்சாகமாக..
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-covid-19-vaccination-awareness-auto-rickshaw-designs-by-syringes-and-vials-425435.html