சென்னையில் இதுவரை 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைக்க முதல்வர் ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதனடிப்படையில், முதல்வரால் மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 22.05.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள தற்காலிக தடுப்பூசி முகாம்களின் மூலமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் 01.07.2021 வரை 10,042 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/jul/02/chennai-corporation-updates-disabilities-vaccination-3652787.html