இன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஒரு 10க்கு 10 அறையில் துவங்கியதாகத் தான் இருக்கும், அதிலும் பல நிறுவனங்களின் தலைவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வர்த்தகத்தைத் துவங்கி வெற்றிபெற்றவர்கள் தான் அதிகம்.
சென்னையில் தங்கம் விலை உயர்வு.. கோவை, மதுரை நிலவரம் என்ன..?!
அப்படி 88 வருடத்திற்கு முன்பு அதாவது 1933ஆம் ஆண்டில் இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்-க்கு ரயில் மூலம் அண்ணன் தம்பி இரண்டு பேர் வந்து குட்டியாகத் துவங்கிய ஒரு வர்த்தகம், இன்று வருடம் 66 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ளது.
இரு சகோதரர்கள்
1933ஆம் ஆண்டுப் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமநாதபுரம் என்ற சிறு கிராமத்தில் இருந்து ஆர்.எஸ்.நாராணயசாமி மற்றும் ஆர்.எஸ்.கணபதி ஆகிய இருவரும் சிறந்த சமையல்காரர்கள் என்பதால் மெட்ராஸில் ஹோட்டல் துவங்க வேண்டும் எனக் கனவோடு வந்தனர்.
ஸ்ரீ ராம பவன் துவக்கம்
பல கடுமையான முயற்சிகளுக்குப் பின்பு அன்றைய மெட்ராஸில் இருந்த தம்பு செட்டி தெருவில் ஸ்ரீ ராம பவன் என்ற பெயரில் 4 டேபிள் உடன் 16 பேர் உட்காரும் அளவிற்குச் சிறிய ஹோட்டலை ஆர்.எஸ்.நாராணயசாமி மற்றும் ஆர்.எஸ்.கணபதி இணைந்து திறந்தனர்.
வாடிக்கையாளர்கள் வருகை
ஸ்ரீ ராம பவன் ஹோட்டல் திறந்த சில நாட்களிலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வர துவங்கினர். இந்த ஹோட்டலில் பிராம்பரிய உணவுகள் மட்டுமே அளிக்கப்படும் காரணத்தால் சில வருடத்திலேயே பிரபலங்கள் வரும் அளவிற்கு இந்த ஹோட்டல் வளர்ந்தது.
ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி
1933ல் இருந்து சுமார் 21 வருடம் ஆர்.எஸ்.நாராணயசாமி மற்றும் ஆர்.எஸ்.கணபதி ஆகிய இருவரும் ஹோட்டல் வர்த்தகத்தை மட்டுமே முழுமையாகச் செய்துவந்தனர். ஆனால் எப்போது பில் கவுன்டரில் ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி ஆகியவை இருக்கும்.
ஸ்ரீ கணேஷ் ராம் 777 பிராண்ட்
அதன் பின்பு 1954ல் முதல் ஸ்ரீ ராம பவன் ஹோட்டல் பில் கவுன்டரில் விற்பனை செய்யப்படும் ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி ஆகிய அனைத்தும் ஸ்ரீ கணேஷ் ராம் 777 என்ற பிராண்ட் பெயருடன் விற்பனை செய்யப்பட்டது. அன்று முதல் இவர்களது ஸ்ரீ கணேஷ் ராம் 777 ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி ஆகியவற்றின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
777 பதிவு எண்
பிராண்ட் பெயரை உருவாக்க வேண்டும் என்றால் அதற்காக அரசிடம் பதிவு செய்ய வேண்டும், அப்படிப் பதிவு செய்யப்படும் போது Fruit Product Order (FPO) பதிவு எண்ணாக இந்த வர்த்தகத்திற்குக் கொடுக்கப்பட்ட எண் தான் இந்த 777.
விளம்பரம்
இந்த 777 எண்ணெயே பிராண்ட் பெயராக மாற்ற விரும்பிய ஆர்.எஸ்.நாராணயசாமி மற்றும் ஆர்.எஸ்.கணபதி கூட்டணி, ஸ்ரீ கணேஷ் ராம் பெயரை சிறியதாகவும், 777 எண்-ஐ பெரியதாகவும் தனது பிராண்ட்-ஐ விளம்பரம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
வெளிநாடு விற்பனை
வெறும் 777 என்ற எண் மட்டும் பிரதானமாக வைத்து விளம்பரம் செய்யப்பட்ட காரணத்தால் மொழி, சாதி, மதம், ஊர் என அனைத்து தடைகளையும் தாண்டி விற்பனை சூடுபிடிக்கத் துவங்கிய, அந்தக் காலகட்டத்திலேயே 777 ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி ஆகியவை வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டதாக, தற்போது இந்நிறுவனத்தின் தலைவரான 44 வயதான ஸ்ரீகாந்த் ரமனி தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் தம்பு செட்டி தெரு
மெட்ராஸில் மிகவும் முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருந்த தம்பு செட்டி தெருவில் ஸ்ரீ ராம பவன் இருந்த காரணத்தால் பல வெளிநாட்டவர்கள் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவது வழக்கம், அப்போது பலரும் ஊறுகாய், பொடி, அப்பளம், சட்னி ஆகியவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா
இதன் மூலம் சில வெளிநாட்டவர்களின் உதவியுடன் 1958ஆம் ஆண்டுக் காலகட்டத்திலேயே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என ஸ்ரீகாந்த் ரமனி தெரிவித்துள்ளார்.
தலைமுறை மாற்றம்
60களில் ஆர்.எஸ் நாராயணசாமி அவர்களின் மகனான ரமனி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ரமனி-யின் நிர்வாகத்தில் சிறு தொழிலாக இருந்த இந்த வர்த்தகம் 8000 சதுரடி தொழிற்சாலைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
SGR 777 பிராண்ட்
இப்புதிய தொழிற்சாலையில் சுமார் 40 பேர் பணியாற்றும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுப் பிராண்ட் பெயரை ஸ்ரீ கணேஷ் ராம் 777 என்பதை வெறும் SGR 777ஆக உருமாறியது. பெயர் மட்டும் அல்லாமல் பல புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுத் தனது விநியோகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கமானது.
ஸ்ரீகாந்த் ரமனி நிர்வாகம்
2001ல் ரமனி அவர்களின் மகனும், தற்போதைய இந்நிறுவனத்தின் தலைவருமான ஸ்ரீகாந்த் ரமனி பாரின் டிரேட் அண்ட் பிஸ்னஸ் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது தலைமையில் SGR 777 நிறுவனம் கூட்டணி நிறுவனத்தில் இருந்து தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது.
தொழிற்சாலை விரிவாக்கம்
அதுமட்டும் அல்லாமல் 8000 சதுரடி தொழிற்சாலை தற்போது 50000 சதுரடியில் மாபெரும் தொழிற்சாலையைக் கும்மிடிபூண்டி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இத்தொழிற்சாலையில் தற்போது சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஹோட்டல் மூடல்
2017ல் ஹோட்டல் வர்த்தகத்தை மூடிய ஸ்ரீகாந்த் ரமனி முழுமையாக உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். தற்போது SGR 777 நிறுவனத்தில் சுமார் 10 பிரிவுகளில் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
60 கோடி ரூபாய் வருமானம்
லாக்டவுன் காலத்தில் SGR 777 நிறுவனம் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாகக் கூறும் ஸ்ரீகாந்த் ரமனி, மார்ச் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு வருடமும் 20 முதல் 25 சதவீதம் வரையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள ஸ்ரீகாந்த் ரமனி அடுத்த 2 வருடத்தில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
88 year old Madras SGR 777 brand rocking in Tamilnadu
88 year old Madras SGR 777 brand rocking in Tamilnadu
Source: https://tamil.goodreturns.in/news/88-year-old-madras-sgr-777-brand-rocking-in-tamilnadu-024244.html