மெட்ராஸ் வரலாறு: சென்னை பிராட்வே சாலையின் இந்த வரலாறு தெரியுமா? – வியக்க வைக்கும் கதை | பகுதி 14 – விகடன்

சென்னைச் செய்திகள்

இந்தியாவில் கொஞ்சம் இடம் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கான இடத்தை, விஜய நகரத்தின் குறுநில மன்னராக இருந்த வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கினர். கடற்கரையை ஒட்டியிருந்த கொஞ்சம் நிலத்தை வாங்கி, தங்கள் பாதுகாப்புக்கு அந்தக் கோட்டையைக் கட்டினர். (இப்போது கோட்டை உள்ள அந்த இடத்தில் மலையப்பன் என்பவரின் வாழைத்தோப்பு இருந்ததாக மா.சு.சம்பந்தன் அவர்கள் எழுதியிருக்கிறார்.).

பிறகு, ஜார்ஜ் டவுனையும் தொடர்ந்து புரசைவாக்கம், வேப்பேரி போன்ற பகுதிகளையும் வாங்கினர். அதன் பிறகு, ஆயுதங்களைக்காட்டி அடித்தே பிடுங்கிக்கொள்ள ஆரம்பித்ததெல்லாம்…. இந்திய பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தின் மைக்ரோ வரலாறு.

மறுபடியும் கொஞ்சம் காலத்துக்கு உள்ளே பிரயாணிக்க வேண்டியிருக்கும். 1700-களில் சென்னையை பிரிட்டீஷாரும் பிரெஞ்சுகாரர்களும் மாறி மாறி கற்… மன்னிக்கவும்… ஆண்டனர். அப்படி ஆண்ட நாட்களில் இரண்டாவது முறையாக சென்னையை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், இந்த முறை பிளாக் சிட்டியான முத்தியால் பேட்டை, ஏழுகிணறு, பெத்தநாயக்கன் பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளைக் கைப்பற்ற, அந்தப் பகுதிகளில் யாரும் நுழைந்துவிடாத படிக்கு ஒரு நீண்ட சுவரை (wall) எழுப்பினர். அது இன்றைய சென்ட்ரல் ஸ்டேஷன் வரை இருந்தது. அதைக் கட்டுவதற்காக சென்னை மக்களிடம் நுழைவு வரி வசூலிக்கப்பட்டது. அந்தச் சுவரை ஒட்டி உருவாக்கப்பட்ட நீண்ட சாலை, வால்டாக்ஸ் ரோடு (சுவர் வரிச் சாலை) எனப்பட்டது.

அந்த நீண்ட சுவரில் ஆங்காங்கே மக்கள், வாகனங்கள் வரிகட்டி வந்து செல்வதற்கான நுழைவாயில்கள் இருந்தன. திருவெற்றியூர் கேட், எண்ணூர் கேட், தண்டையார் பேட்டை டோல்கேட், எலிபென்ட் கேட் போன்றவை இருந்தன. இன்றும் மிச்சம் இருப்பது தண்டையார் பேட்டை டோல்கேட் மற்றும் எலிபென்ட் கேட்டுகள்.

அது என்ன எலிபென்ட் கேட்?

அது யானைகள் நிறுத்திவைக்கப்பட்டு கம்பீரமாகக் கண்காணிக்கப்பட்ட, கவனிக்கப்பட்ட இடம்…. அதனால் அது யானை கவனி என்றும் அழைக்கப்பட்டு இப்போது யானைகவுனியாகியிருக்கிறது. (யானைகவுனி என்ற அந்த இடத்துக்கும் திருப்பதிக்கும் ஒரு சம்பந்தம் உண்டு… அதை பிரிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம்)

ஒரு பக்கம் சுவரால் எழுப்பப்பட்ட அந்த இடத்தை ஒத்தைவாடை என்றும் மக்கள் இன்றும் சொல்லி வருகிறார்கள். அந்த ஒத்தவாடை அருகே இருந்த நாடகக் கொட்டகையில் எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் நடித்தனர். அவர்களுடைய வீடும் அப்போது அங்கே இருந்தது என்பதெல்லாம் நம்மை நெருங்கி நிகழ்ந்த வரலாறுகள்.

எம்.ஜி.ஆர் வசித்த வீடு யானை கவுனி பகுதியில் வெகுகாலம் வரை அப்படியே இருந்தது. பிறகு அதை ஒரு குஜராத்திக்காரர் வாங்கிவிட்டதாக நடிகர் ராஜேஷ் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் பழைய வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து அது சிதலமாகிக்கிடந்த நாளில் அவர் அதைப் புகைப்படம் எடுத்திருந்தார்.

எல்லா நாட்களிலும் எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கு நாடகத்தில் நடிக்க வேடம் கிடைக்காது. வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும். சாப்பிட வழி இல்லாமல் இருந்தபோது, பக்கத்து வீட்டில் இருந்த இன்னொரு ஏழை பெண்மணி சிறிதளவு நொய்யைக் கொடுத்ததாகவும், அதைக்கொண்டு தன் தாய் கஞ்சி காய்ச்சிக் கொடுத்ததாகவும் எம்.ஜி.ஆர் ஒரு சமயம் மேடையில் பேசினார்.

வேலை இல்லாத அந்த நாட்களில் சால்ட் கோட்ரஸ் பாலத்தின் மீது சரக்குகளை தள்ளிச் செல்லும் வண்டிக்காரர்களுக்கு உதவுவதுதான் எம்.ஜி.ஆர்., சக்கரபாணி ஆகியோருக்கு வேலை. சில வண்டிக்காரர்கள் காலணா, தம்படி என்று தந்துவிட்டுச் செல்வார்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

வண்டி தள்ளிய ஒருவர் முன்னணி நடிகராகவும், முதல்வராகவும் ஆக உதவியிருக்கிறது சென்னை.

அது என்ன சால்ட் கோட்ரஸ்? அதன் சுவாரஸ்ய பின்னணியை அடுத்து பார்ப்போம்!

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madrass-part-14-chennai-broadway