சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிக்கலாமே.. என்ன தமிழகத்தில் கங்கை நதியா? திமுக எம்.பி.யின் நக்கல் டிவீட்

அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வரும் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினிப் பொருள்கள் வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைப்பதோடு, கட்டடத்தில் சிக்கியிருக்குப்போரை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகளும், கரும்புகையும் வருவதைக் காண முடிகிறது. 

இதையும் படிக்கலாமே.. இப்படி ஏமாந்தால் எப்படி? என்னதான் செய்யும் காவல்துறை?

இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கணினி விற்பனை நிலையத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்டக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/jul/22/a-fire-broke-out-in-an-apartment-building-in-anna-salai-chennai-3665079.html