சென்னை: சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பிரபலமான நகைக்கடையான சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது பெண் மருத்துவர் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து மாம்பலம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கத்திற்கு பதில் வெள்ளிக்கம்பி இருந்தது என்றும், நகைக்குள் அரக்கு இருந்தும் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த பிரபலமான நகை கடையில் போலி நகைகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது . அந்த பரபரப்பு ஓய்வதற்குள் சென்னை சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது.
சென்னை ஐயப்பன்தாங்கலைச் பெண் மருத்துவர் திரிவேணி சென்னை மாம்பலம் போலீசாருக்கு தபால் மூலம் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் கடந்த 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கினேன் .
மன்னிப்புக் கேட்டார்
அந்த தங்கச் செயினானது கடந்த 2019 ஆம் ஆண்டு அறுந்து விழுந்தது. அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தால், உடனடியாக இதுகுறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டேன். நகை செய்யும்போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் என்று கூறி அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். அதன் பின்னர் வேறு நகைகளை மாற்றி கொடுத்ததார்,
வளையல்
இந்நிலையில் கடந்த 2015 -ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனது., அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைத்து ஏமாற்றி இருந்தார்கள். நான் வாங்கிய இரண்டு நகைகளிலும் என்னை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்க நகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
போலியான தங்க நகை
ஆனால் காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
மாம்பலம் போலீசார்
இதனைத் தொடர்ந்து மாம்பலம் காவல்துறையினர் வழக்கை விசாரித்தனர்.விசாரணைக்கு பின்னனர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மாம்பலம் போலீசார் மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளக்கம் தருமா
சென்னையில் மிகவும் பிரபலமான நகைக்கடையான சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது எழுந்துள்ள இந்த புகார் குறித்து அந்த நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி நகை, தங்க நகை செய்யும் தங்கத்தை குறைப்பது, செம்புவை அதிகம் கலப்பது போன்ற புகார்கள் பல்வேறு நகைக்கடைகள் மீது புகார்கள் உள்ளது.
இதன் காரணமாகவே நகைகளுக்கு கேடிஎம் அல்லது 916 தரம் என்று உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது அரசு. இதேபோல் கேடிஎம் மற்றும் 916 முத்திரை உள்ள நகைகளைத்தான் விற்க வே;ணடும் என்று அரசு உத்தரவிட்டுளளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-mambalam-police-registered-a-fraud-case-against-saravana-store-thanga-nagai-maligai-428073.html