சென்னை: சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூலிப்படையினர் மருத்துவர் சுப்பையாவை வெட்டி படுகொலை செய்தனர்.
மருத்துவர் சுப்பையாவின் தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. 17 பேர் கொண்ட குழு.. தேர்தலுக்கு தயாராகிறது தமிழக பாஜக..!
மருத்துவர் கொலை
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டனர். அப்போது இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டி கொடுத்த சிசிடிவி
நிலத்தகராறில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள்.
இந்த கொலை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார்.
நேரடி விசாரணை
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் கொரோனா காலத்திலும் இந்த வழக்கின் நேரடி விசாரணையாக தினமும் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தது.
குற்றவாளிகள் 9 பேர்
இந்த வழக்கை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதாவது அப்ரூவர் ஆகி விட்ட ஐயப்பனை தவிர பொன்னுசாமி, மேரி புஷ்பம் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது மாலை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-has-convicted-nine-people-in-the-murder-of-renowned-neurologist-subbaiah-in-chenn-428972.html