சென்னை: இந்தியாவில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்று சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக இருக்கிறது. குறிப்பாக ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தாண்டி அலுவலகத்துக்கு செல்வது என்பது ஒரு மலையையே தாண்டுவது போன்றதாகும்.
பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது
சென்னையை பொறுத்தவரை அனைத்து வார்டு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
முக்கியமான காலை, மாலை நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் பகலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனை தவிர்க்கும் வகையில் இனிமேல் தூய்மை பணிகள் அனைத்தும் இரவில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5,000 மெட்ரிக் டன் குப்பைகள்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 கோட்டங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக தினந்தோறும் சுமார் 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன.பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு
இந்தச் சாலைகளில் மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், மாநகரின் 200 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் சுமார் 5,000 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டு குப்பைகளைக் கையாளும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில் தூய்மைப் பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும் பொழுதும், குப்பைகள் அகற்றப்படும் பொழுதும் பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன.
இரவு நேரத்தில் தூய்மை பணி
இதனைக் கருத்தில் கொண்டு பேருந்து சாலைகளிலும், உட்புறச் சாலைகளிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் சார்பில் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தற்பொழுது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் வண்ணம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறையின் மூலம் பேட்டரியால் இயங்கும் 255 வாகனங்கள், 53 மூன்று சக்கர வாகனங்கள், 147 கம்பாக்டர் வாகனங்கள், 50 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள், 23 டிப்பர் லாரிகளும் மற்றும் 1,786 தூய்மைப் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதிரடி உத்தரவு
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் கூடுதல் வாகனங்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு அனைத்துத் தூய்மைப் பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-announced-that-all-cleaning-work-in-chennai-will-be-carried-out-only-at-nigh-429364.html