சென்னை: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
இலங்கையை மிரட்டும் டெல்டா…இந்தியாவை விட 3 மடங்கு வீரியம்-ஒருநாள் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியது!
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அறிவுறுத்தல்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் கட்டாயம்
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து அனுமதிக்க வேண்டும் எனவும். நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது கலந்து கொள்பவர்கள் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
விதிமீறல் கண்டறியப்பட்டன
மேலும், உணவு உண்ணும் நேரங்களில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கருக்கைகள் அதிக இதுநாள்வரை திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,812 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 600 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களிடமிருந்து ரூ.229 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுக்கு தடை
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே மாதம் 2021 முதல் இதுநாள்வரை கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.370 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடு நடத்த தடையும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
இந்த இலையில் கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட பொது நிகழ்ச்சியானது மாநகராட்சி பகுதியில் அரசின் தடையை மீறி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களில் 20 பேர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு 51 முதல் 60-ன் படியும், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 188-ன் படியும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-warned-that-stern-action-will-be-taken-if-corona-prevention-rules-are-violat-429688.html