போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை போலீசார், திருநங்கைகளுடன் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார்கள்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தலைமையக கூடுதல் கமிஷனர் லோகநாதன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிருத்திகா யாஷினி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். திருநங்கைகளின் அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று பேசினார்கள்.
திருநங்கைகளின் வாழ்வை முன்னேற்றுதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடாமல், நல்வழிபாதையில் செல்லுதல் மற்றும் அவர்களின் உரிமை போன்றவை பற்றி திருநங்கைகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே சுயவேலை வாய்ப்புத்திட்டத்தில் திருநங்கைகளுக்கு சென்னை போலீசார் செய்யும் உதவிகள் பற்றியும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு செய்யும் உதவிகள் பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் திருநங்கைகளிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான திருநங்கைகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
Source: https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/10/04145106/Awareness-discussion-with-transgender-people-in-Chennai.vpf