சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு காவல்நிலையங்கள் ஒதுக்கப்பட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு கீழ் எத்தனை காவல்நிலையங்கள் செயல்படும் என்று முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை காவல்துறை 3ஆக பிரிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அறிவித்தது. கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் மூலம் காவல் ஆணையரக பிரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி சென்னை மாநகர காவல்துறை சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று 3ஆக பிரிக்கப்பட்டது. தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு தற்போது சிறப்பு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நானும் பத்திரிகையாளர்… பாராட்டுபவர்களுக்கு தான்.. திட்டுவதற்கும் உரிமை இருக்கிறது -முதல்வர் பேச்சு
அதிகாரிகள் நியமனம்
ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் இந்த காவல் ஆணையகரத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள ரவி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரிப்பு
முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு கீழ் 137 காவல்நிலையங்கள் இருந்தன. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர காவல் ஆணையகரத்திற்கு கீழ் 104 காவல்நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. . தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை காவல் நிலையம்
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு கீழ் சென்னை மாநகராட்சியில் இருந்த 13 காவல்நிலையங்களும், காஞ்சிபுரத்தில் இருந்த 2 காவல்நிலையங்களும், செங்கல்பட்டில் இருந்த 5 காவல்நிலையங்களும் என மொத்தம் 20 காவல்நிலையங்கள் இனி செயல்படும். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கீழ் சென்னை மாநகராட்சியில் இருந்த 20 காவல்நிலையங்களும், திருவள்ளூரில் இருந்து 5 காவல்நிலையங்களும் என மொத்தம் 25 காவல்நிலையங்கள் இனி செயல்படும்.
இதற்கான முழு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையங்கள் பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காகவும், சட்ட ஒழுங்கு கண்காணிப்பிற்காகவும், சென்னை காவல்துறையை பிரித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-trifurcation-how-many-stations-will-avadi-and-tambaram-police-circle-get-435359.html